கிரியா யோகம் ஒரு அறிமுகம்

பாபாஜியின் கிரியா யோகமானது கடவுள் எனும் மெய்யறிவுடன் ஒருமித்து ஆன்மானுபவம் பெறுவதற்கான ஒரு விஞ்ஞானபூர்வமான கலையாகும். பண்டைய பதினெண் சித்தர் மரபில் கற்பிக்கப்பட்ட யோக முறைகளைத் தொகுத்து அவற்றிலிருந்து கிரியா யோகத்திற்கு உயிரூட்டினார் இந்தியாவின் மாபெரும் சித்தர்களில் ஒருவரான மஹாவதார் பாபாஜி. கிரியா யோகமானது ‘கிரியாக்கள்’ எனப்படும் பல்வேறு பயிற்சிகளை 6 கிளைகளாகப் பிரித்து உட்கொண்டுள்ளது.




கிரியா ஹத யோகம்: உடலைத் தளர்த்திக் கொள்வதற்கான பயிற்சிகளான ஆசனங்கள், ‘பந்தங்கள்’ எனப்படும் தசைப்பூட்டுக்கள் மற்றும் உள-உடல் குறிகள்/அசைவுகளான முத்திரைகளை உள்ளடக்கியதுதான் கிரியா ஹத யோகம். இவற்றை பயிற்சி செய்வதன் மூலம் மிகுந்த ஆரோக்கியம் மற்றும் மன அமைதியை பெற முடியும். அத்தோடு, உடலில் உள்ள சக்தி மையங்களான சக்கரங்கள் மற்றும் சக்தியின் வழித்தடங்களான நாடிகளை எழுப்பவும் முடியும். பாபாஜி, மிகுந்த பயன் தரக்கூடிய குறிப்பிட்ட 18 ஆசனங்களை இதற்காக தேர்ந்தெடுத்தார். இவை பல்வேறு நிலைகளை உட்கொண்டு ஜோடிளாகவும் கற்பிக்கப்ப்டுகின்றது. நமது ஸ்தூல உடலை நாம் நமக்காகப் பேணாமல், இறைவனின் கோவிலுக்கான ஒரு வாகனமாகப் பேணிடல் வேண்டும்.

                                  

கிரியா பக்தி யோகம்: நமது ஆன்மாவினுள் இறை தேடலைப் பயிர் செய்தல். பக்தி சார்ந்த செயற்பாடுகள் மற்றும் தொண்டுகளின் மூலம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆன்மீக பரவசத்தை எழுப்பலாம். பக்தி பாடல்கள், சடங்கு-வழி வழிபாடு, தீர்த்தயாத்திரைகள் மற்றும் இறை வழிபாட்டின் மூலம் அன்பிற்கினிய ஆண்டவனை அனைத்திலும் காண்பதினால் நமது செயல்கள் அனைத்திலும் இனிமை கலக்கிறது.



கிரியா மந்திர யோகம்: அமைதியாக மனதிற்குள் ஜெபிக்கப்படும் மெல்லிய ஒலிகளின் மூலம் உள்ளுணர்வு, அறிவாற்றல் மற்றும் சக்கரங்களை எழுப்பலாம். ஒரு மந்திரமானது, ‘நான்’ எனும் எண்ணத்தைச் சார்ந்த மனதின் செயல்பாடுகளுக்கு ஒரு மாற்றம் தந்து அபரிதமான சக்தியினைச் சேமிக்க வழி செய்கின்றது. அதே நேரத்தில் ஆழ் மனதின் பழக்கங்கள் தூய்மையும் அடைகின்றது.


கிரியா மந்திர யோகம் என்பது அமைதியாக சக்கரங்களின் பீஜ மந்திரங்களான ஒலிகளை ஜெபிப்பதன் மூலம் இறைத்தன்மையைத் தூண்டுவதாகும். இப்பயிற்சியின் மூலம் ஒருவர் தன் முழு விழிப்புணர்வோடு சேர்த்து தனது சித்தத்தையும் இறையுணர்வினை நோக்கித் திருப்ப முடிகிறது; இதன் மூலம் இறை சக்தியும் அருளும் தடையின்றி அவரை ஆட்கொள்கின்றது.

                                     


கிரியா தியான யோகம்: படிப்படியான நிலைகளாக அமைந்துள்ள இத்தொடர் தியானப் பயிற்சி நம் மனதைக் கட்டுக்குள் அடக்கி, நமது ஆழ் மனதை தூய்மை செய்வதற்கான ஒரு விஞ்ஞான பூர்வமான கலையாகும். இதன் மூலம் மனத்தெளிவு, மனதை ஓர் நிலை படுத்தும் திறன், தொலை நோக்கு, அறிவு மற்றும் படைப்பாற்றல் வளர்வதோடு மட்டுமல்லாது மூச்சற்ற நிலையில் இறைவனிடம் ஒன்றிடும் ‘சமாதி’ நிலையில் ஆன்மானுபவமும் பெறவியலும்.


கிரியா குண்டலினி யோகம்: இந்த சக்தி வாய்ந்த சுவாசப் பயிற்சியின் மூலம் ஒருவரது அபரிதமான சக்தி மற்றும் மேல்-மன விழிப்புணர்வை எழுப்பி தம் முதுகுத்தண்டின் அடிப்பகுதியினின்று உச்சந்தலை வரையுள்ள ஏழு முக்கியமான சக்கரங்கள் வழியாக பாய்ச்ச முடியும். இது ஒவ்வொரு சக்கரத்துடனும் தொடர்புடைய மறைந்திருக்கும் பேராற்றலை வெளி கொணர்ந்து ஐந்து கோசங்களிலும் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவராக ஒருவரை மாற்றுகிறது.


கிரியா குண்டலினி பிராணாயாமம் நமது நாடி மற்றும் நரம்பியல் மண்டலத்தில் அமைந்துள்ள நுண்மையான பகுதிகளின் மேல் பணி செய்கின்றது. நாடி மற்றும் நரம்பு மண்டலங்களை தூய்மை செய்து அவற்றினுள் உயிர்ச் சக்தியினைத் தடையின்றி ஓடவிடுதலாகும். இறுதியில் இப்பயிற்சிகள் சுழுமுனை நாடியினை எழுப்பி ஆதன் மூலம் குண்டலினி சக்தியை மேல் நோக்கிப் பாய்ச்சுகிறது.



கிரியா வாசி யோகம்:

வாசி யோகா பிராணாயாமம் வெளியே உள்ளவாயுக்கள் காற்று. சுவாசிக்கப்படும் கற்று பிராணன். நெறி படுத்திய சுவாசம் பிராணாயாமம். காலக்கணக்கோடு நெறிபடுத்திய சுவாசம் வாசி. முறைப்படி ஆதார தலங்களில் மூச்சை நிறுத்தி வாசி உருவாக்குவது வாசியோக பிராணாயாமம்.
வாசி யோகா பிராணாயாமம் ஐந்து நிலை கொண்டது அவைகள்: 1. பூரகம் = மூச்சு காற்றை உள்ளே இழுப்பது. 2. கும்பகம் = மூச்சு காற்றை உள்ளே நிறுத்தல். 3. ரேசகம் = மூச்சு காற்றை வெளிவிட்டால். 4. உட்பவிவித்தல் அல்லது கேவல கும்பகம். 5. ஆதார தலங்களில் நிறுத்தி வாசி உருவாக்கல்.


கிரியா யோகம் முழு “விழிப்புணர்வோடு செய்யப்படும் செயல்”. இது நம்மை உணர்ந்து நமது உண்மையான சொரூபதினை அறியும் வழியாகும். பாபாஜியின் கிரியா யோகத்தில், ஆசனங்கள், பிராணாயாமம், தியானம், குண்டலினி, வாசி மற்றும் மந்திரம் ஆகியவற்றை பயிற்சிகள் முழு விழிப்புணர்வுடன் ஒருங்கிணைக்கப் படுகின்றது. மேலும், நமது எண்ணங்கள், சொற்கள், ஆசைகள் மற்றும் அனைத்து செயல்களிலும் விழிப்புணர்வானது ஒருங்கிணைக்கப் பெறுகின்றது. இந்த சாதனை நம்மை மேலும் விழிப்படைந்த மனிதர்களாக மாற்றும் பேராற்றல் கொண்டதாகும்.


பாபாஜியின் கிரியா யோக தியானம் ஆழ் மனதில் நாம் உணரும் உண்மையினை வெளி கொணர்ந்து நமது விழிப்பு நிலையிலும் அதனை உணர்த்தி நிலை பெறச்செய்கின்றது. நமது விழிப்புணர்வின் தன்மையே நாம் வாழும் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிக்கின்றது. ஆகையால் எண்ணங்களை முழுவதுமாக நிறுத்தி ஒரு வெற்றிடதிற்குச் செல்லாமல், ஆற்றல் வாய்ந்த நம் தியான முறைகள் மனவலிமை, காட்சிப் படுத்தும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தி, உள்ளுணர்வு மற்றும் அகத்தூண்டுதல் பாய்ந்தோட வழி வகுக்கின்றன. மேலும் நமது மனதை ஓர்நிலைப் படுத்தும் திறனை மேம்படுத்தி நம் விழிப்புணர்வு முழுவதும் ஆன்மாவை நோக்கித் திரும்பும்படி செய்கின்றன.


பாபாஜியின் கிரியா யோகத்தை பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர் தன்னையே பயின்று தனது தீய பழக்கங்கள், ஆசைகள், பயம் மற்றும் பல்வேறு தொந்தரவுகளிலிருந்து விடுபடமுடிகின்றது. மெதுவாக அவர் தம் அக சாட்சித்தன்மை நிலையை அடைந்து முழு அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவிக்கலாம். தமது அகங்காரத் தன்மையை விட்டொழிப்பதன் மூலம் ஒருவர் தன் முழுப் பண்பினையே மாற்றியமைத்துக் கொள்ள முடிகின்றது; ஒருவர் தன்னை அன்பின் கருவியாகவும் அதீத படைப்பாற்றலின் அறிவாகவும் உணரத் துவங்கி, பிறருக்கு ஆனந்தத்தை அளித்து, இவ்வுலகிற்கு மேலும் மெருகூட்டுகின்றார்.


பாபாஜியின் கிரியா யோகம் எனும் இந்த ஆன்மீக மரபில் ஒருவர் ‘கண்களைத் திறந்து கொண்டே கனவு காணும்’ நிலையிலிருந்து ‘விழித்தெழுகின்றார்’. தன்னையுணர்ந்து ஆன்மானுபவம் பெறுவதற்கு ஒரு முழுமையான ஆன்மீகப் பாதையாகிய பாபாஜியின் கிரியா யோகம், நமது வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கியதாகும். சுய ஒழுக்கம் மிகுந்த இந்தப் பாதை ஒருவரைத் திறந்த மனத்துடன் கருணை மிகுந்த வாழ்வைக் கடைப்பிடிக்க உதவுகின்றது.


- Yogi Shiva Nesananda


No comments:

Post a Comment

Yogi Shiva Nesanananda

hermetic philosophy